மலையகத்தின் பல பகுதிகளில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும் நாட்களில், ஏனைய நாட்களை விட மதுபான விற்பனை பாரியளவில் அதிகரித்துள்ளதாக மதுபானசாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மலையகத்தின் நகர்ப்புறங்கள் மட்டுமன்றி கிராமப்புறங்களிலும் உள்ள மதுபான சாலைகளில் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் தினங்களில் விற்பனை அதிகரித்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கப்பெற்றவுடன், பலர் அதனைப் பெற்றுக்கொண்டு நேரடியாக மதுபானசாலைகளுக்கே செல்வதாகக் கூறப்படுகிறது.
வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் இக்கொடுப்பனவை, அதன் நோக்கத்திற்குப் பயன்படுத்தாமல் பலர் மதுபானத்திற்காகச் செலவிட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சமூக ஆர்வலர்கள், குடும்பப் பொறுப்புகளை மறந்து இவ்வாறான பணத்தை மதுவிற்காகச் செலவிடுவது கவலைக்குரிய விடயம் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த மதுபானசாலை உரிமையாளர்கள்,
"அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் நாட்களில் எமது விற்பனை முன்பை விட அதிகரிக்கின்றது. எனினும், அவர்கள் எமது வாடிக்கையாளர்கள் என்பதால் நாம் யாரிடமும் முறைப்பாடு செய்ய முடியாது. அவர்கள் கொண்டு வரும் பணம் எதிலிருந்து கிடைத்தது என்பது எமது வியாபாரத்திற்கு முக்கியமில்லை" எனத் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் வறுமையை ஒழிக்க வழங்கும் நிதி, மீண்டும் மதுபானம் ஊடாக அரசாங்கத்தின் வரி வருமானத்திற்கே செல்வதாக சமூக ஆய்வாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.













.jpeg)