பணத்திற்கு பந்தயம் கட்டி மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி - 11 இளைஞர்கள் கைது


பிலியந்தலை - கெஸ்பேவ மாற்று வீதியில் பணத்திற்கு ஒட்டயம் வைத்து மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி பந்தயங்களில் ஈடுபட்ட 11 இளைஞர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் வசம் இருந்த 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 02 முச்சக்கரவண்டிகள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

கெஸ்பேவ மாற்று வீதிக்கு நேற்று சனிக்கிழமை (28) இரவு 7.30 மணிக்கு வருமாறு வாட்ஸ்அப் குழுவொன்றின் ஊடாக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, குறித்த இளைஞர்கள் அந்த இடத்திற்கு வந்து இவ்வாறு சட்டவிரோதமான முறையில் போட்டிகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கிராம மக்களின் உதவியுடன் பந்தயம் நடைபெறும் காட்சிகள் வீடியோ பதிவு செய்யப்பட்டன. பின்னர் வீதியை மறித்து இந்த இளைஞர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

சுற்றிவளைப்பின் போது சிலர் தமது மோட்டார் சைக்கிள்களை கைவிட்டு தப்பியோடியுள்ளனர். பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட சில மோட்டார் சைக்கிள்களில் தலா இருவர் வீதம் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்த களுபோவில போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்ப்படுத்தப்பட்டு அறிக்கை பெறப்படவுள்ளது.

சந்தேகநபர்களையும் அவர்களது வாகனங்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த பிலியந்தலை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதோடு, மேலதிக விசாரணைகளில் பிலியந்தலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.