இஸ்ரேலிலுள்ள 29,000 இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி : இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்



இஸ்ரேலில் பணிபுரியும் 29,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் உடன் வியாழக்கிழமை (06) விசேட தொலைபேசி உரையாடலொன்றை முன்னெடுத்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலை இராஜதந்திர ரீதியில் கையாண்டு, அமைதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை இரு அமைச்சர்களும் வலியுறுத்தினர்.

மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கவும், அவசர காலங்களில் உதவவும் டெல் அவிவ் (Tel Aviv) நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் 24 மணிநேரமும் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு இதுவரை பாரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.