இந்த ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி, கணேமுல்ல பொலிஸ் பிரிவில் 4 கிலோ 423 கிராம் கொக்கெய்ன் மற்றும் 3,450 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு குறித்த பெண்ணின் கணவர் மற்றும் மகன் ஆகியோர் உதவி செய்துள்ளமையும், அவர்கள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தமையும் விசாரணைகளில் அம்பலமானது.
சந்தேநபர்கள் இருவரும் சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் தங்கியிருந்தபோது, கடந்த 24ஆம் திகதி இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு நேற்று (28) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்.
இதற்கமைய, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 23 மற்றும் 57 வயதுடைய கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.













