முறையற்ற வகையில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை



மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு, பொதுமக்கள் எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தி வைப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டுக்குள் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், இது தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு இருந்தபோதிலும், சில தரப்பினர் திட்டமிட்ட வகையில் கலன்கள் அல்லது வேறு கொள்கலன்களில் எரிபொருளைச் சேகரித்து வருவதால், அத்தகைய செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மீன்பிடிப் படகுகள், தொழிற்சாலைகள், வேலைத்தளங்கள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய வீட்டுத் தேவைகளுக்காகத் தவிர, வேறு எந்தத் தேவைகளுக்கும் கலன்கள், போத்தல்கள் அல்லது ஏனைய கொள்கலன்களுக்கு எரிபொருள் வழங்குவதைத் தவிர்க்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்களுடன் கலந்தாலோசித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேகரித்து, களஞ்சியப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராகவும், எரிபொருள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பல்வேறு போலிப் பிரசாரங்களை வெளியிடும் நபர்கள் அல்லது குழுக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை பொலிஸார் செயற்படுவார்கள் எனவும் குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.