பஸ் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு !


அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனுராதபுரம் - குருணாகல் பிரதான வீதியின் சிராவஸ்திபுர நீர் தேக்கத்திற்கு அருகில் நேற்று புதன்கிழமை (25) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரத்திலிருந்து தலாவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.