முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் 'போதைப்பொருள் ஒழிப்பு வாரம்' இன்று (01) நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது.
இன்று ஆரம்பமாகியுள்ள வாரத்தை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு, போதைப்பொருள் அனர்த்தத்தை ஒழிப்பதற்கான முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை தீர்மானித்தன் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு இன்று மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன,பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது விற்பவருக்கும் அடிமையானவர்களுக்குமான அறிவித்தல் அகன்று செல் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டம் என்று பொறிக்கப்பட்ட 1818 அவசர தொலைபேசி இலக்கம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் வாகனங்கள் பொறிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.
இந்த வாரத்தின் ஊடாக போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தி ஒடுக்குதல், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களை மீட்டு, அவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துதல், இதற்காகத் தேவையான மக்கள் விழிப்புணர்வு மற்றும் மேம்பட்ட சமூக உரையாடலை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய, இந்த வாரத்தில் அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் அடிமட்ட அளவில் விரிவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அரசாங்க அமைச்சுகள் உட்பட அனைத்து இணைந்த நிறுவனங்களின் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் பல திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் பல்வகையான புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. அத்துடன், பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை மையப்படுத்தி பல்வேறு பிரசார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
போதைப்பொருள் அனர்த்தத்தை ஒழிப்பதற்காக சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் ஊடாகத் தேவையான சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏனைய தலையீடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் அதேவேளை, இந்தத் தேசிய செயற்பாட்டை வெற்றிபெறச் செய்வதற்கு அவசியமான பரந்த சமூக விழிப்புணர்வை இந்த அனைத்துத் திட்டங்கள் மூலமும் ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் 'போதைப்பொருள் ஒழிப்பு வாரம்' வேலைத்திட்டம் !
Posted by Battinews on Saturday, February 28, 2026













