நாட்டில் நிலவி வரும் வறட்சியான வானிலை காரணமாக, பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலை மேலும் தீவிரமடைந்தால், நீர் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சபை தலைவர் எச்சரித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள அம்பத்தலை சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு 560,000 கன மீற்றர் நீரையும், லேபுகம நிலையம் 150,000 கன மீற்றர் நீரையும் உற்பத்தி செய்கின்றன. எனினும், இந்த நிலையங்கள் தங்களுக்குக் கிடைக்கும் கொள்ளளவுக்குள் மட்டுமே நீரை விநியோகிக்க முடியும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சபை தலைவர் பண்டார தெரிவித்ததாவது: “நீரைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு நாங்கள் கூறவில்லை. வீண்விரயத்தைத் தவிர்த்து சிக்கனமாக பயன்படுத்துமாறே கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில், உயர்நிலப்பகுதிகளில் வசிப்போருக்கும், நீர்க்குழாய் அமைப்பின் இறுதிப் பகுதிகளில் உள்ளவர்களுக்கும் குறைந்த அழுத்தத்திலேயே நீர் கிடைக்கும் நிலை உருவாகலாம்” என்றார்.
மேலும், கடல்நீர் கலப்பு கணிசமாக அதிகரித்து வருவதாகவும், மணல் அகழ்வு போன்ற மனிதச் செயல்பாடுகள் இந்த பிரச்சினையை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உப்புநீர் கலப்பை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், தடுப்பணை அமைக்கும் பணிகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




.webp)
.webp)







