நிந்தவூரில் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டு - இருவர் கைது



நீண்டகாலமாகச் செயற்படாமல் இருந்த தனியார் அனல் மின் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த மின் நிலையத்தில் நீண்டகாலமாகத் திருட்டு இடம்பெற்று வருவதாக அதன் உரிமையாளர் அண்மையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதற்கமையச் செயற்பட்ட பொலிஸார், மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறையிலிருந்து தடயவியல் பொலிஸாரை சனிக்கிழமை (28) அன்று சம்பவ இடத்திற்கு அழைத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது, குறித்த மின் நிலையத்தின் காவலாளி உட்பட மற்றொரு சந்தேக நபரையும் நிந்தவூர் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர்களைச் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், தன்னிடம் இருந்த வாயுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி மின் நிலையத்தில் உள்ள புறாக்களை வேட்டையாட வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார். எனினும், அவரிடமிருந்து மீட்கப்பட்ட வாயுத் துப்பாக்கி குறித்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.