மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் பயணம் தொடர்ந்தும் ரத்து


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அனைத்து நாடுகளினதும் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படவிருந்த அனைத்து விமானப் பயணங்களும் இன்று (01) மாலை 05.00 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
 
இன்று காலை 06.15 மணி வரை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவிருந்த 18 விமானங்களும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த 25 விமானங்களும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்தார்.

அத்துடன், நேற்று (28) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்பட்ட ஃபிட்ஸ் எயார் மற்றும் எயார் அரேபியா ஆகிய இரண்டு விமானங்களும் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கே திருப்பிவிடப்பட்டிருந்தன.

இதேவேளை, மத்திய கிழக்கு நாடுகள் அல்லது மத்திய கிழக்கு ஊடாக ஏனைய நாடுகளுக்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன்னர் தமது விமான சேவை முகவர்களைத் தொடர்புகொள்ளுமாறும், மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து அவதானம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அல்லது www.airport.lk என்ற கட்டுநாயக்க விமான நிலையத்தின் இணையத்தளத்திற்குச் சென்று விமானப் பயண விபரங்கள் தொடர்பில் புதுப்பித்துக்கொள்ளுமாறு விமான நிலைய கடமை நேர அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையால் இலங்கையிலிருந்து வெளியேற முடியாத வெளிநாட்டுப் பயணிகளுக்காக, நாட்டில் தங்கியிருப்பதற்கு மேலும் 7 நாட்களுக்கு விசா சலுகைக் காலத்தை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலியா, சீனா, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா, தாய்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான மற்றும் அங்கிருந்து வருகை தரும் விமானப் போக்குவரத்துக்கள் வழமை போன்று இடம்பெறும் என கட்டுநாயக்க விமான நிலைய கடமை நேர அதிகாரி மேலும் தெரிவித்தார்.