மட்டக்களப்பில் பரபரப்பினை ஏற்படுத்திய கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் - சந்தேக நபர்கள் 6 பேருக்கும் விளக்கமறியல்
மட்டக்களப்பில் பரபரப்பினை ஏற்படுத்திய கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து பெண்னொருவர் உயிருடன் மீட்கப்பட்டமை, மற்றுமொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை வெள்ளிக்கிழமை (10) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது.
நீதவான் நீதிமன்றம் நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது, கடத்தல், கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களையும் இரண்டு நகைக்கடை உரிமையாளர்களையும் இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இன்று இந்த வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவர் மட்டுமே நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் ஏனைய சந்தேக நபர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படாமல் நிகழ்நிலை ஊடாக இவ்வழக்கு தொடர்பிலான விசாரணை நடத்தப்பட்டது.
இதன்போது இவ்வழக்கில் கைதான சந்தேக நபர்கள் 6 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இந்த வழக்கு தொடர்பான மறுவிசாரணை இம்மாதம் 15ஆம் திகதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்தது.












