6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இரு வெளிநாட்டவர்கள் கைது


சுமார் 06 கோடி ரூபாய் பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருளுடன் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 05 கிலோகிராம் 401 கிராம் எடையுடைய போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் சந்தைப் பெறுமதி சுமார் 06 கோடியே 40 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்த 22 வயதுடைய ஆண் ஒருவரும் 30 வயதுடைய பெண் ஒருவரும் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் இந்த போதைப்பொருளை தாய்லாந்தின் பேங்காக் நகரில் கொள்வனவு செய்து, அங்கிருந்து இந்தியாவின் பெங்களூரு நகருக்குச் சென்று, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.