வெலிவேரிய பகுதியில் முச்சக்கர வண்டியில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, அது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (30) வெலிவேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுங்கமுவிலிருந்து மீகஹவத்த பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவை பொலிஸார் ஆய்வு செய்ததன் மூலம், சம்பந்தப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டதாக சேனாதீர தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்து கைது செய்யுமாறு வெலிவேரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விசாரணைகளைத் தொடர்ந்து, வெலிவேரிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநரையும், 23 வயதுடைய உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, வாகனத்தின் உரிமையாளர் கஞ்சா உட்கொண்டிருந்ததும், சாரதி போதை மாத்திரைகளை உட்கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நபருக்கு நன்றி தெரிவித்த பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாதீர, இவ்வாறான ஒத்துழைப்புகள் பாரிய குற்றங்களைத் தடுக்க உதவும் எனக் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை மற்றும் சதிநோக்கமற்ற கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








.jpg)




