வலம்புரிச் சங்குடன் சந்தேகநபர் ஒருவர் கைது !


வலம்புரிச் சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர் ஒருவரை களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று புதன்கிழமை (08) மதியம் களுத்துறை பஸ் டிப்போவிற்கு அருகில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, வலம்புரிச் சங்கு ஒன்றை 35 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யத் தயாராக இருந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.