சுரங்கக் குழியில் சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் : சந்தேகநபர் கைது !


கஹவத்தை பகுதியில் 61 வயதுடைய இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல விசேட பொலிஸ் குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், டெல்வல பொலிஸ் உத்தியோகத்தர்களால் வனப்பகுதி ஒன்றில் ஒளிந்திருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கஹவத்தை கந்த பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் காணாமல் போயுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, வர்த்தகர் காணாமல் போவதற்கு முன்னர் கடந்த சனிக்கிழமை (28) அவர் கஹவத்தை-நீலகம வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளமை தெரியவந்தது.

அவரது மோட்டார் சைக்கிள் பின்னர் அதே வீதியின் வளைவு ஒன்றிற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், அவரது கைபேசி அருகில் இருந்த தேயிலைத் தோட்டம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம், கடந்த திங்கட்கிழமை (30) வர்த்தகரின் சடலம் சுரங்கக் குழி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.