நாளை சூரியன் உச்சம் கொடுக்கும் இடங்கள் !


நாளை (09) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சூரியனின் தோற்ற வடதிசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, எதிர்வரும் 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதனால் பல இடங்களில் அதிகவெப்பநிலை நிலவும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் உயர்வடையக்கூடும்.

இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகரித்த வெப்பம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

போதியளவு நீர் அருந்துதல், நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல் மற்றும் அதிக வெயில் வேளைகளில் கடுமையான வேலைகளைத் தவிர்த்தல் போன்றவற்றின் மூலம் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை நண்பகல் 12.12 அளவில் சிலாபம், பிங்கிரிய, ஹல்மில்லவெவ, பண்டுவஸ்நுவர, கொகரெல்ல, கவுடுபெலல்ல, கோப்பாவெளி மற்றும் கிரான்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.