
இலங்கையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும், எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தி மூலங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு ரஷ்யா தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் பிமல் ரத்நாயக்க ரஷ்யாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, அந்நாட்டின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரமன் மர்ஷாவின் இதனை உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான ஆதரவைத் தொடர்ச்சியாக வழங்கவும் பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் இலங்கையின் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தனது நாடு அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்று தெரிவித்த ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர், இலங்கைக்குத் தற்போது தேவையான எரிபொருளை வழங்குவதற்கும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க உடன்பட்டுள்ளார்.
அதற்கமைய, ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவையான எரிபொருள் கையிருப்புகளை விரைவாக விடுவிக்கும் செயல்முறையை முறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், இதற்காக ரஷ்ய நிறுவனங்களுக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வசதிகளைத் செய்து தருவதாகவும் கூறினார்.
மேலும், இலங்கையின் எரிசக்தித் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் நிலக்கரியை வழங்கவும் தனது நாடு தயாராக இருப்பதை அவர் இங்கு வலியுறுத்தினார்.
இலங்கையின் அபிவிருத்திப் பாதை எதார்த்தமாவதைக் காண்பதே தனது நாட்டின் விருப்பம் என்றும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிலையான அபிவிருத்தித் திட்டங்களுக்கு ரஷ்ய அரசாங்கம் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.







.jpg)




