பெரிய புல்லுமலை பகுதியில் புதையல் தோண்டப்படுவதாகக் கரடியனாறு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட குழுவினர் இன்று அதிகாலை 5 மணியளவில் அப்பகுதியைச் சுற்றிவளைத்தனர். இதன்போது, புதையல் தோண்டும் பணிகளில் ஈடுபட்டிருந்த நால்வரையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வாழைச்சேனை விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றி வருபவர் என்பதுடன், தற்போது விசேட கடமை நிமித்தம் மகாஓயா முகாமில் இணைக்கப்பட்டிருந்த, 36 வயதுடைய, மொனராகலையைச் சேர்ந்த அதிகாரி என்பதும் தெரியவந்துள்ளது.
அவருடன் உறுகாமம், தெஹியத்தகண்டி மற்றும் பெரிய புல்லுமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 44 மற்றும் 48 வயதுடைய ஏனைய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து புதையல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட பூசைப் பொருட்கள், நவீன அகழ்வு உபகரணங்கள் மற்றும் 6 கைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கரடியனாறு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அத்துடன், இந்தச் சட்டவிரோத அகழ்வு முயற்சியின் பின்னணியில் வேறு எவருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.












