பிரான்ஸ் உள்ளூராட்சித் தேர்தலில் இலங்கை வம்சாவளி இளைஞன் வெற்றி




பிரான்சில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 18 வயது மாணவர் பிலால் லுக்மான் நகராட்சி உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பிரான்சின் மிக இளம் வயது மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக அவர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

பாரிஸின் புறநகர் பகுதியான கயன்கோர்ட் நகரில் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்த பிலால், இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த மார்ச் 15 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெற்ற தேர்தலில், தற்போதைய மேயரின் அணியில் போட்டியிட்டு அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

பிலால் லுக்மான் தற்போது பிரான்சின் புகழ்பெற்ற 'பாரிஸ்-பாந்தியன்-அசாஸ்' பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சட்டத்துறை மாணவராகப் பயின்று வருகிறார். தனது 18 ஆவது வயதிலேயே வாக்காளராகவும், வேட்பாளராகவும் ஒரே தேர்தலில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

தனது 15 மற்றும் 16 வயதிலேயே பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் கல்வி அமைச்சர் மற்றும் உள்ளூர் மேயர் ஆகியோரின் அலுவலகங்களில் பயிற்சி பெற்று பொது விவகாரங்களில் அனுபவம் பெற்றவர். மேலும், சிறுவர் நகராட்சி சபையில் பங்கேற்று சமூக சேவைகளிலும் ஈடுபாடு காட்டி வந்துள்ளார்.

தனது வெற்றி குறித்து பிலால் லுக்மான்,

"நாம் எங்கிருந்து வந்தோம் அல்லது எந்தப் பாதையில் வந்தோம் என்பது முக்கியமல்ல. நாம் இணைந்து எதைக் கட்டியெழுப்பப் போகிறோம் என்பதே முக்கியம். அரசியல் என்பது அர்த்தமற்றது என்று நினைப்பதை மக்கள் நிறுத்த வேண்டும்."

தனது கல்விப் பணிகளுக்கு மத்தியில், புதிய அரசியல் பொறுப்புகளையும் சமநிலைப்படுத்தி, இளைஞர்களை அரசியலில் அதிகளவில் ஈடுபட ஊக்குவிப்பதே தனது நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.