வீதி விளக்குகளை அணைக்கும் தீர்மானம் விபத்துக்கள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் - மோட்டார் சைக்கிள் சங்கம் எச்சரிக்கை !


நாட்டில் இரவு 6.00 மணி முதல் 10.00 மணி வரை வீதி விளக்குகளை அணைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

போதிய வெளிச்சமின்மையால் வாகன சாரதிகள், குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பெரும் விபத்துக்களைச் சந்திக்க நேரிடும்.

இருளைப் பயன்படுத்தி பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவர் வீரந்த அமரசிங்க விடுத்துள்ள அறிக்கையில்,

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராகக் கடுமையாகச் செயற்படும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், இந்த ஆபத்தான தீர்மானம் தொடர்பில் மௌனம் காப்பது வேடிக்கையானது.

போதிய வெளிச்சமின்மையால் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டி ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பதன் மூலம் பொலிஸ் தனது வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளவே இந்த நடவடிக்கை உதவும் என அவர் சாடியுள்ளார்.

வீதி சமிக்ஞை விளக்குகள், வீதி அறிவிப்புப் பலகைகள் மற்றும் வீதி விளக்குகளுக்கு சூரிய சக்தி ஆற்றலைப் பயன்படுத்துமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.