குஷ் போதைப்பொருளுடன் பொலிஸ் பரிசோதகரின் தாய் கைது


மொரகஹஹேன, கும்புக பகுதியில் 15 கிராம் 'குஷ்' போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடொன்று போதைப்பொருள் விநியோக மையமாகச் செயற்படுத்தப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (9) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் உத்தியோகத்தர் இந்திக வீரசிங்கவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸ் பரிசோதகர் விமல் தலைமையிலான குழுவினர் இந்தச் சோதனையை முன்னெடுத்தனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 15 கிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சோதனையின் போது, சந்தேகநபரான பெண் தனது மகன் ஒரு பொலிஸ் பரிசோதகர் எனக் கூறி சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

எனினும், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவரிடம் போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது.

பொலிஸ் விசாரணைகளின்படி, இந்தப் பகுதி முழுவதும் போதைப்பொருள் விநியோகம் செய்வதற்கான பாதுகாப்பான இடமாக இந்த வீடு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேகநபரின் மகன் கொழும்பு பகுதியில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் பொலிஸ் பரிசோதகராகப் பணியாற்றுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் உத்தரவின் பேரில், நிலையப் பொறுப்பதிகாரி இந்திக வீரசிங்கவின் வழிகாட்டலில், பொலிஸ் பரிசோதகர் விமல் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்தச் சோதனையை வெற்றிகரமாக முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.