பயணத்தின் போது அறிமுகமில்லாதவர்களிடமிருந்து உணவு பொருட்கள் எதையும் பெற வேண்டாம் !



யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்குத் தனியாகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளைக் குறிவைத்து, மயக்க மருந்து கலந்த 'லெமன் பஃப்' பிஸ்கட்டுகளை வழங்கிப் பெருமளவிலான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

எனவே, அறிமுகமில்லாதவர்களிடம் பிஸ்கட்டுகளை வாங்கி உண்ண வேண்டாம் எனவும், பொதுமக்கள் இக்கொள்ளையர்களிடம் அவதானமாக இருக்குமாறும் கிழக்கு மாகாணப் பெருங்குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் விளக்குகையில்:

"கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குப் பயணிக்கும் பேருந்துகளில், கொள்ளையர்கள் பயணிகள் போலவே ஏறிக்கொள்கின்றனர். பேருந்தில் யாராவது தனியாகப் பயணம் செய்கிறார்களா என்பதை நோட்டமிடும் அவர்கள், பின்னர் அவர்களுக்கு அருகில் சென்று நயமாகப் பேச்சுக்கொடுப்பார்கள்.

தொடர்ந்து, தமது பையிலிருந்து உறையிடப்பட்ட பிஸ்கட் பாக்கெட் ஒன்றை எடுத்து, அது புதியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திப் பயணிகளிடம் வழங்குவார்கள். அந்தப் பிஸ்கட்டைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே பயணிகள் மயக்கமடைந்து விடுவார்கள். அதன் பின்னர், அவர்கள் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலி, மோதிரம், காப்பு போன்ற ஆபரணங்களையும், கைப்பையிலுள்ள பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு, கொள்ளையர்கள் வழியில் ஏதாவதொரு இடத்தில் இறங்கித் தப்பிச் சென்றுவிடுகின்றனர்."

இவ்வாறு மயக்கமடைபவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூன்று நாட்களுக்குப் பின்னரே சுயநினைவிற்குத் திரும்புகின்றனர். அண்மைக் காலங்களில் இவ்வாறான பல சம்பவங்கள் குறித்துப் பல்வேறு காவல் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எனவே, நெடுந்தூரப் பேருந்துகளில் தனியாகப் பயணம் செய்பவர்கள், அறிமுகமில்லாத நபர்கள் எதனை வழங்கினாலும் அதனை வாங்கி உண்ணக் கூடாது எனவும், பொதுமக்கள் இது குறித்து மிகுந்த விழிப்புடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.