புதிய இணையதளம் மற்றும் அழைப்பு மையம் திறப்பு !


இலங்கையின் பழமையான அரச நிறுவனங்களில் ஒன்றான பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் 161ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பொதுச் சேவைகளை நவீனமயமாக்கும் விசேட திட்டமாக புதிய அழைப்பு மையம் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளம் என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளன.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமையில் நேற்று (07) திணைக்கள வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

தற்போதைய சவால்களை முறியடிக்க டிஜிட்டல் மயமாக்கல் இன்றியமையாதது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதன் மூலம் மக்கள் நீண்ட தூரம் அலுவலகங்களுக்கு வந்து வரிசையில் காத்திருக்காமல், வீட்டிலிருந்தே சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

பொதுமக்கள் 1930 என்ற இலக்கத்தின் ஊடாகத் திணைக்களத்தின் சேவைகள் குறித்த சரியான தகவல்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

புதிய இணையதளமானது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தகவல்களைப் பெறக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரச சேவைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தகவல் தொடர்பு இடைவெளியைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள் முன்னெடுக்கும் மோசடி நடவடிக்கைகளைத் தவிர்க்க இந்த நேரடித் தகவல் பரிமாற்றம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிறப்புப் பதிவு, வெளிநாட்டவர்களுடனான திருமணம் மற்றும் சொத்துப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இந்த அழைப்பு மையம் மற்றும் இணையதளங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டம், இலங்கையின் அரச நிர்வாகக் கட்டமைப்பில் ஏற்படும் புதிய தொழில்நுட்ப மாற்றத்தின் ஆரம்பமாக அமையும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத், அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார மற்றும் பதிவாளர் நாயகம் எஸ். ஜலதீபன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.