குளங்களை அபிவிருத்தி செய்ததாக கூறி பல கோடி மோசடி !


கடந்த பொதுபெரமுன ஆட்சிக் காலத்தில், வடமத்திய மாகாணத்தில் குளங்களை அபிவிருத்தி செய்ததாகக் கூறி, வடமத்திய மாகாண அபிவிருத்தி வடிவமைப்பு மற்றும் இயந்திரங்கள் முகவர் நிலையத்தினூடாக பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, அதன் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் பிரதம நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டுள்ளார்.

வடமத்திய மாகாண அபிவிருத்தி வடிவமைப்பு மற்றும் இயந்திரங்கள் முகவர் நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் 'பி' (B) அறிக்கையூடாக முன்வைத்த சமர்ப்பிப்புகளைக் கருத்திற்கொண்டு அனுராதபுரம் பிரதம நீதவான் நயனத் சசிந்து விக்ரமரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் மேலும் தெரிவிக்கையில், வடமத்திய மாகாணத்தில் குளங்களை அபிவிருத்தி செய்ததாகக் கூறி, பல ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த முகவர் நிலையத்தின் ஊடாக 60 கோடி ரூபாவிற்கும் அதிக நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் தற்போதைய தலைவரே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டது.

வடமத்திய மாகாணத்தில் குளங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டதாகக் கூறி இந்த பாரிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ள போதிலும், அவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு குளத்தையும் கண்டறிய முடியாமல் போயுள்ளதாக அந்த முகவர் நிலையத்தின் தற்போதைய தலைவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மன்றுக்கு அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் சிக்கலானதும் விரிவானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் மேலும் தெரிவித்தது.

அத்துடன், இந்த நிதி மோசடி தொடர்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து அதன் முன்னேற்றத்தை மன்றுக்கு அறிவிக்க அனுமதி கோரிய குற்றப்புலனாய்வுத் திணைக்களம், இந்த மோசடியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அரச அதிகாரிகள் அல்லது ஏனைய தரப்பினர் எவரேனும் இருப்பின் அவர்களைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.