மட்டக்களப்பு சந்திவெளி புதுப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் தேரோட்ட உற்சவ திருவிழா



மட்டக்களப்பு சந்திவெளி புதுப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் 81வது வருடாந்த மகோற்சவத்தின் 16ம் நாள் உற்சவமான இன்றைய தினம் தேரோட்ட உற்சவதிருவிழா நடைபெற்றது.

சுந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் மகோற்சவமானது சென்ற 30ம் திகதி வியாழக்கிமை மகோற்சவ பிரதமகுரு சிவஸ்ரீ வைத்தியநாத வைகுந்த சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.

மகோற்சவத்தின் 16ம் நாளாகிய இன்றைய தினம் ஆலயத்தின் 20வது ஆண்டு தேர்ரோட்டமாக அமையபெற்றதுடன் காலையில் மூலமுர்த்தி விநாயகப் பெருமானுக்கு விசேட பூசைகள் நடைபெற்று அதன் பின்னர் வசந்த மண்டப பூசைகள் நடைபெற்றது.

பஞ்சமுக விநாயகப் பெருமானுக்கு வேத பாராயணம் முழங்க பக்தர்களின் அரோகரா கோசத்துடன் தேர் ஏறுவதற்காக உள் வீதி உலா வலம்வந்ததும் விநாயகப்பெருமான் தேரில் ஆரோகனிக்கப்பட்டதும் பக்தர்கள் இருமருங்கும் சிதறு தேங்காய் உடைக்க அரோகராகோசத்துடன் வடம்பிடிக்க தேரோட்டம் ஆலயத்தை சுற்றி வலம்வந்தது.

தேரோட்ட நேரத்தில் பக்தர்கள் வடம்பிடித்து தங்களின் நேர்த்தி கடன்களை தீர்த்ததுடன் ஆலய வீதியை சுற்றி அங்கப்பிரச்சனையும் செய்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

ஆலயத்தின் முன்னால் தேரானது வலம் வந்ததும் விநாயகப்பெருமானுக்கு பச்சைசாத்தி விநாயகப் பெருமான் ஆலயத்திற்குள் எளுந்தருளினார். பின்னார் பூசைகள் இடம்பெற்று தோட்ட உற்சவமானது இனிதே நிறைவுபெற்றது.

சந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் 17 நாட்களை கொண்ட மகோற்சவத்தில் இன்று (15) வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு நடைபெற்றதும் நாளை காலை சனிக்கிழமை (16) வங்கக்கடலில் விநாயகப்பெருமானின் தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.