மூன்று இலட்சம் முதலாம் தர மாணவர்களின் கல்வி பாதிப்பு - இலங்கை ஆசிரியர் சங்க தலைவர்


அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் புதிய கல்விச் சீர்திருத்த நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை காரணமாக 2026 ஆம் ஆண்டின் 2 தவணைக்கான 1 ஆம் தர பாடத்திட்டங்கள், கற்பித்தல் பாடத் தொகுதிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிகள் இதுவரை வழங்கப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதனால் நாடாளாவிய ரீதியில் 1 ஆம் தரத்தில் கல்வி பயிலும் சுமார் 3 இலட்ச மாணவர்களும், அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் புதன்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த விடயம் தொடர்பாக கல்வி அமைச்சுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இது வரையில் முறையான தீர்வுகள் கிடைக்கவில்லை. 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் மற்றும் ஆறாம் தரங்களுக்கான சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்த போதிலம் ஆறாம் தர பாடத்திட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் 1 ஆம் தவணைக்கான கற்பித்தல் பாடத் தொகுதிகள் வழங்கப்பட்டு பாடசாலைச் செயற்பாடுகள் ஆரம்பித்த போதிலும் 2 ஆம் தவணைக்கான எவ்வித வழிகாட்டல்களும் இல்லாமையால் தற்போது முதலாம் தரக் கல்வி செயற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் கல்வியின் அடித்தளமே முதலாம் தரத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளின் படி, இச்சீர்த்திருத்தங்களை சரியான முறையில் முன்னெடுக்கத் தவறுவது நாட்டின் எதிர்காலச் சந்ததியினரை கட்டியெழுப்புவதில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.