மகிந்த குடும்பத்தை சிக்கவைக்க கபில மீது அழுத்தம் கொடுக்கப்பட்டது – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

 


 முன்னாள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு முன்பு விசாரணை அதிகாரிகளால் அழுத்தத்துக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டதாக எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை தொடர்புபடுத்தும் வகையில் வாக்குமூலம் வழங்கும்படி கபில சந்திரசேனாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

விசாரணையாளர்கள் விரும்பிய வகையிலான வாக்குமூலத்தைப் பெறும் நோக்கில், அவரை சிறையில் அடைப்பதாக மிரட்டியும் மனரீதியாக துன்புறுத்தியும் இருந்ததாக நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.

மேலும், பொலிஸ் மற்றும் விசாரணை அமைப்புகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தவறு செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் எவரும் நியாயமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றாலும், விசாரணைகளின் போது அச்சுறுத்தல், மிரட்டல் மற்றும் கட்டாயப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.