.jpeg)
நாட்டில் இதுவரை இனங்காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், டெங்கு காய்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 24 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 41 ஆயிரத்து 144 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இம்மாதம் கடந்த 13 ஆம் திகதி வரை சுமார் 7302 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அந்தவகையில் நாளந்தம் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். தென்மேற்கு பருவ பெயர்ச்சியோடு அனைத்து மாவட்டங்களிலும் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதம் சடுதியாக அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.
டெங்கு பரவலைக் கருத்திற் கொண்டு 89 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாகவும், 1185 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் சாரசரி பாதிப்பினைக் கொண்டுள்ள பகுதிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 24 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்து உள்ளதுடன் உயிரிழப்பு சதவீதமும் 0.06 ஆக உயர்வடைந்துள்ளது. எதிர்வரும் தினங்களில் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதம் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. இதுவரை 50 வீதத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
மேலும் கொழும்பு (8686) , கம்பஹா (7263) , மாத்தறை (2986) , இரத்தினபுரி (2874) , களுத்துறை (2718), காலி (2519) மற்றும் கண்டி (2202) ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதக் காணக் கூடியதாக உள்ளது. ஆகையால் பொதுமக்கள் டெங்கு அபாயத்தை கருத்திற் கொண்டு தாம் வாழும் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருக்கக்கூடிய பகுதிகளை இனங்கண்டு அவற்றை இல்லாதொழித்து தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








.jpeg)
.jpeg)


