2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து பொறுப்பேற்கப்பட்டதாகக் கூறப்படும் பெருந்தொகையான தங்கம் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று வியாழக்கிழமை (11) அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
சாட்சியமளித்த பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரியைக் கண்டறியும் விசாரணைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சுரேஷ் சலே இருப்பதாக நான் நான்கு வருடங்களுக்கு முன்னரே பாராளுமன்றத்தில் சந்தேகம் வெளியிட்டிருந்தேன், இன்றும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றேன். ஏனெனில், சஹரானுடன் மிகவும் நெருக்கமான தொடர்பைப் பேணிய ஒருவராக சுரேஷ் சலே காணப்படுகின்றார்.
சஹரானுக்குப் பணம் செலுத்தத் தொடங்கியதும் சுரேஷ் சலேதான். யுத்தம் நடைபெற்ற காலத்தில் சஹரானுக்கு இராணுவத்துடன் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை. அத்துடன் சஹரானின் செயற்பாடுகளினால் முழுமையான பலனைப் பெற்றுக்கொண்டது கோட்டாபய ராஜபக்ஷவே ஆவார். சுரேஷ் சலே என்பவர் கோட்டாபயவின் வலது கை போன்றும், அவரின் பிரதான ஆலோசகர் போன்றும் செயற்பட்ட ஒருவராவார். எனவேதான், இந்தத் தாக்குதலின் பின்னணியில் இவர்கள் நிச்சயம் இருக்கின்றார்கள் என்று நான் திடமாக நம்புகின்றேன்.
இந்த விசாரணைகள் இவ்வளவு காலம் தாமதித்ததற்குக் காரணம் அரசாங்கங்கள் மாறுவதும், இந்த விவகாரம் திடீரென மேலெழுந்து பின்னர் அப்படியே அமுக்கப்படுவதுமே ஆகும். நல்லாட்சி அரசாங்கமும் இதனைச் சரியான முறையில் கையாளவில்லை. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த கோட்டாபயவின் அரசாங்கம் இந்த விவகாரத்தை முழுமையாக மூடிமறைத்திருந்தது. எனவே, தற்போதைய அரசாங்கம் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வது மிகவும் நியாயமானதாகும்.
சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட போது, அவர் ஒரு இராணுவ வீரர் எனக் கூறி தற்பொழுது ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. என்னுடன் சேர்த்து ஜெனரல்கள், பிரிகேடியர்கள், கேணல்கள் என 35 அதிகாரிகள் எவ்வித காரணமுமின்றி வீட்டுக்கு அனுப்பப்பட்ட போது, இந்த ஆர்ப்பாட்டங்களைச் செய்பவர்கள் இலங்கையில்தானே இருந்தார்கள்? அப்போதெல்லாம் நாங்கள் இராணுவ வீரர்கள் இல்லையா? இந்த யுத்தத்தை முன்னின்று வழிநடத்தி, திட்டமிட்டு, வெற்றியைத் தேடித்தந்தது இந்த சுரேஷ் சலேயா? எனவே, அந்தப் பிரசினையை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிடமே கேட்க வேண்டும். கோட்டாபயவின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட உடனேயே, இந்தத் தரப்பினர் பதற்றமடைந்து வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டங்களைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.
தற்போது சுரேஷ் சலே சிறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறப்படும் நிலையில், ஒரு இராணுவ அதிகாரிக்கு நடத்தும் விதம் சரியில்லை என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். நான் கைது செய்யப்பட்டு எவ்வித வழக்குகளும் இன்றி சிறிய அறையொன்றில் மாதக்கணக்கில் வைக்கப்பட்டிருந்த போது, எனது மனைவிக்கு மாத்திரமே ஒரு நாளைக்கு ஒரு முறை வந்து பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், தற்பொழுது சுரேஷ் சலேயின் முழுப் பரம்பரைக்குமே, அதாவது அவரது மனைவி, தாய், சகோதரர், மகன் என அனைவருக்கும் அவரை வந்து பார்ப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே தற்பொழுது அவருக்கு எவ்வளவு சிறந்த முறையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது. கைது செய்யப்படும் நபர்கள் அந்தச் சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்கத்தான் வேண்டும், அங்கு வி.ஐ.பி சலுகைகளை எதிர்பார்க்க முடியாது.
எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் முறையான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தூய்மையான எண்ணத்துடனும் முயற்சியுடனும் செயற்படுகிறது. இதுவரை காலமும் இந்த விடயத்தில் நியாயமான விசாரணைகள் நடக்கவில்லை.
எனவே தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் இந்தச் செயன்முறை முற்றிலும் சாத்தியமானதொன்றாகும். அது வெற்றியடைய வேண்டும் எனப் பிரார்த்திப்பதுடன், இந்தத் திட்டம் வெற்றியடைவதற்காக அரசாங்கத்துக்கு எம்மால் வழங்கக்கூடிய அனைத்துப் பலத்தையும் எந்நேரமும் வழங்குவோம் என்றார்.







.jpg)




.jpeg)
