நடுவீதியில் சுழன்று கவிழ்ந்த கெப் வாகனம்!

மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக வாகன விபத்துகளின் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் – போடைஸ் – டயகம பிரதான வீதியில் கடுமையான பனிமூட்டத்துடனான வானிலை நிலவுவதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு அக்கரப்பத்தனை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று இரவு கொழும்பில் இருந்து அக்கரப்பத்தனை நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று ஹட்டன் – போடைஸ் – டயகம வீதியில் கட்டுப்பாட்டை இழந்து, நடுவீதியில் சுழன்று விபத்துக்குள்ளானது. எனினும், குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் பயணிக்கும் சாரதிகள், வேகக் கட்டுப்பாட்டுடன் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்திப் பாதுகாப்பாக வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.