
மத்திய கிழக்கின் மோதல் நிலைமை தற்போது முடிவடையும் நிலையில் காணப்படுகிறது. ஆகவே இனியேனும் அரசாங்கம் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கட்சி என்ற அடிப்படையில் பலமாக எழுச்சிப் பெற்றுள்ளோம். தொகுதி அமைப்பாளர்களுக்கு புதிய தலைமைத்துவத்தை நியமிப்போம். எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தலுக்காக தயார் நிலையில் உள்ளோம்.
சட்ட சிக்கலை குறிப்பிட்டுக் கொண்டு மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடாமல் எத்தேர்தல் முறையிலாவது தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.மாகாணசபைத் தேர்தலில் வேண்டுமென்றே சட்ட சிக்கல் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு மக்கள் விடுதலை முன்னணி முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியது.
அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாகத்தின் சுமை ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு மோதலை குறிப்பிட்டுக் கொண்டு ஒவ்வொரு மாதமும் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது. தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் ஏற்பட்ட நிதி இழப்பு முழுமையாக மறைக்கப்பட்டது.
மத்திய கிழக்கின் மோதல் நிலைமை தற்போது முடிவடையும் நிலையில் காணப்படுகிறது. ஆகவே இனியேனும் அரசாங்கம் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரமணமளிக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.






.jpeg)





