நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பே உளவுத்துறையினரால் தகவல் வழங்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் தவறியுள்ளதாக எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்துக்கு உரிய தலைமைத்துவம், நிர்வாகத் திறன் அல்லது இத்தகைய நெருக்கடி நிலைகளை கையாளும் முன்அனுபவம் இல்லையென அவர் குற்றஞ்சாட்டினார். நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாக பலவீனமே நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிர்வாக செயலிழப்பு மற்றும் பலவீனமான முகாமைத்துவத்தை முன்னதாகவே விவசாயிகளும் வணிக சமூகமும் அனுபவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் ஒரே இரவில் நிகழ்ந்ததல்ல என்றும் தெரிவித்தார். சம்பவம் நடைபெறுவதற்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்னரே உளவுத்துறையினர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், பொறுப்புக்கூற வேண்டியவர்கள் உரிய தீர்மானங்களை எடுக்காததே இந்த மோசமான நிலைமைக்கு காரணம் எனவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் விரிவான மற்றும் முறையான விசாரணை நடத்துவதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கான காரணங்களை கண்டறிதல், எதிர்கால நடவடிக்கைகளை பரிந்துரைத்தல் மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான பரிந்துரைகளை முன்வைத்தல் ஆகியவை இந்தக் குழுவின் பிரதான பொறுப்புகளாகும்.
நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இன்று (07) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு, ஜனாதிபதியின் செயலாளர் இந்த விசேட விசாரணைக் குழுவை நியமிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
மூவரைக் கொண்ட இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மிலிந்த குணதிலக மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர்.
இந்தக் குழு சம்பவம் தொடர்பான அனைத்து விடயங்களையும் ஆய்வு செய்து, தனது பரிந்துரைகளுடன் கூடிய இறுதி அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது.
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உடனடி விசாரணைகளை பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் கொழும்பு குற்றப் பிரிவு (CCD) ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







.jpg)


.jpg)


.jpg)
