மட்டக்களப்பு நகரில் கடை தொகுதிகளில் தீ விபத்து - கடைகள் எரிந்து நாசம் !


மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள கடை தொகுதிகள் சிலவற்றில் இன்று (07) செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீயானது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இன்றைய தினம் அதிகாலை 5.00 மணியளவில் திடீரென வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீயானது அடுத்து இருந்த கடைக்கும் வேகமாகப் பரவியுள்ளது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் படையினருக்கு அறிக்கப்பட்ட நிலையில், விரைவாக தீயினை அணைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் காத்தான்குடி நகரசபை தீயனைக்கும் பிரிவு,மட்டக்களப்பு தலைமையக தீயணைப்பு பிரிவு மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தீவிபத்தினால் இரண்டு கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் ,காத்தான்குடி நகரசபை தலைவர் அஸ்பர் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு வருகைதந்து தீயினை கட்டுப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களை வழங்கினர்.

இந்த தீவிபத்து காரணமாக ஒரு கடை முற்றாக எரிந்துள்ளதுடன், மற்றைய கடை பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

தீக்கான காரணம் இதுவரையில் அறியப்படாத நிலையில் இது தொடர்பான விசாரணைகளில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.