சட்டவிரோத வாகனப் பதிவு விவகாரம் : மோட்டார் போக்குவரத்து திணைக்கள முன்னாள் அதிகாரி கைது


மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பரிமாற்றம் தொடர்பான விசாரணை குறித்து, அத்திணைக்களத்தின் முன்னாள் முகாமைத்துவ சேவை அதிகாரி ஒருவர் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டார்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அனுமதியின்றியும், சுங்க வரிகளைச் செலுத்தாமலும் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்றை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், குறித்த மோட்டார் வாகனத்தின் முதலாம் உரிமையாளர் மாற்றத்தைச் செய்வதற்காக சாளர இலக்கம் ஒன்றை வழங்கி, அதனை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ளீடு செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் முகாமைத்து சேவை அதிகாரியான விஜேசேகர ஆரச்சிஸே சந்திரா விஜயசேகர என்பவர் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.