மட்டக்களப்பில் பரதநாட்டிய ஆசிரியையின் இறுதிக்கிரியையில் மாணவிகளின் கண்ணீர் மல்கிய நாட்டிய சமர்ப்பணம்




இலங்கையின் புகழ்பெற்ற நடன ஆசிரியரான கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்குகள் நேற்று திங்கட்கிழமை (20) நடைபெற்றபோது அவரது மாணவிகள், பார்ப்போரின் மனதை உருக்கும் விதமாக, இறுதி மரியாதையான நாட்டியாஞ்சலியை நிகழ்த்திய காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

மட்டக்களப்பில் பரதகலாலயா என்னும் நாட்டியப்பள்ளியை நடத்திவரும் ஓய்வுபெற்ற ஆசிரியையான சுபித்ரா கிருபாகரன், இலங்கை உட்பட சர்வதேசத்தின் பல பகுதிகளிலும் பரதகலாலயா நாட்டியப்பள்ளியை நிறுவி பெருமளவு நாட்டிய மாணவர்களை உருவாக்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவு நாட்டிய மாணவிகளையும் ஆசிரியர்களையும் உருவாக்கிய சுபித்ரா கிருபாகரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) சுகவீனம் காரணமாக காலமானார்.

நேற்று மாலை அன்னாருக்கான இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அப்போது அவரது மாணவிகள் கண்ணீருடன் வழங்கிய நாட்டிய சமர்ப்பணம் பலரின் கவனம் பெற்றிருக்கிறது.

இறுதிச்சடங்கில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.