2029 தேர்தலில் சர்வஜன அதிகாரத்துக்கு இளைஞர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் – திலித் ஜயவீர




2029 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் சர்வஜன அதிகாரத்துக்கு இளைஞர்களின் ஆதரவு நிச்சயமாகக் கிடைக்கும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

குருணாகல் மாநகரசபை மைதானத்தில் 'சர்வஜன யூத் வைப் 2026' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இன்று நாங்கள் உங்கள் மத்தியில் உரையாற்றுவது வழக்கமான மற்றொரு அரசியல் கூட்டத்தில் அல்ல.

வரலாற்று ரீதியாக நமது நாட்டின் அரசியலில் இளைஞர்களுக்கு எங்காவது ஓரிடத்தில் அநீதி இழைக்கப்பட்டிருந்தால், அது திருத்தப்பட வேண்டும் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டுள்ள ஒரு குழுவாக, உங்கள் மீது கொண்ட அன்பையும் அக்கறையையும் இதயப்பூர்வமாக சுமந்து கொண்டே இங்கு வந்துள்ளோம்.

எமது இயக்கத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் இளைஞர்கள் ஏமாற்றமடையவோ, கவலையடையவோ அல்லது வருந்தவோ வேண்டிய சூழ்நிலை ஏற்படாது என்பதை உறுதியாகக் கூறுகிறோம்.

கடந்த காலங்களில் அரசியலில் பொறுப்பற்ற முறையில் வெளியிடப்பட்ட கருத்துக்களை நம்பி நீங்கள் ஏமாற்றமடைந்திருந்தால், இனிமேலும் அத்தகைய ஏமாற்றங்களுக்கு நாங்கள் இடம் அளிக்கப்போவதில்லை.

இது இளைஞர்களுக்கான ஒரு நேர்மையான இயக்கமாகும். எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு தேர்தலொன்று நடத்தப்பட்டால், குருணாகல் மாவட்டத்தில் மட்டும் 1,50,000 இளைஞர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

அந்த வாக்குகள் மூலம் எமக்கு வாய்ப்பளித்தால், உண்மையாகவே உங்களுக்கு சந்தோஷமானதொரு தேசம் உருவாகும். இளைஞர்களின் அந்த முடிவிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. அந்த வாக்குகள் மூலம் நமது நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட வேண்டும்.

தமக்குத் தேவையான வீட்டை உருவாக்கிக் கொள்ளவும், வாகனத்தைப் பெற்றுக் கொள்ளவும், சொந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி உலகின் அபிவிருத்தியடைந்தடுகளில் வாழும் மக்களுக்கு இணையான வாழ்க்கைத்தரத்தை அடையவும் வேண்டும் என்ற கனவும் ஆசையும் உங்களிடம் இருக்குமாயின், அதற்கேற்ப நீங்கள் செயற்படும் போது நாட்டின் எதிர்காலம் ஒரே இரவில் மாற்றமடையும்.

எதிர்மறை எண்ணங்களை அகற்றி, எப்போதும் நேர்மறையாக சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே 'தொழில் முனைவோர் நாடு' என்ற கருத்தாக்கத்தை ஒவ்வொரு இளைஞரின் மனதிலும் விதைக்க முயற்சிக்கிறோம். எந்தவொரு அரசியல்வாதி உங்கள் மனதில் தவறான கருத்துக்களை திணித்தாலும், உங்கள் மனதை நேர்மறை சிந்தனைகளால் நிரப்பவே நாங்கள் விரும்புகிறோம்.

உலகின் எந்தவொரு நாட்டுடனும் போட்டியிடும் வல்லமையும் அறிவும் நம்பிக்கையும் நாட்டின் இளைஞர்களுக்கு உள்ளது. எனவே, நாளை காலை விடியும் போது உங்கள் மீதும், எங்கள் மீதும், நாட்டின் மீதும் நம்பிக்கை வைத்து விழித்தெழ வேண்டும்.

துயரத்தில் மூழ்கியிருக்கும் அல்லது இயலாமையைப் பேசும் இளைஞர்களாக அன்றி, விரைவில் அனைவரும் ஒன்றாக இணைந்து நிமிர்ந்து நிற்போம் என்ற உணர்வோடு செயற்பட வேண்டும்.

இந்த எளிய செய்தியை உங்கள் மனதில் நிறுத்தி, சக இளைஞர்களுடன் பகிர்ந்து கொண்டால், நாம் எதிர்பார்க்கும் அபிவிருத்தியடைந்த புதிய இலங்கையை உருவாக்க முடியும் என்றார்.