நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: பிரதான ஜெயிலர் உட்பட 20 பேரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு


நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 32 பேர் உயிரிழந்தமை தொடர்பான சந்தேகநபர்களை அடையாளம் காணும் அணிவகுப்புக்காக 20 பேருக்கு அழைப்பாணை விடுக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஷிலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
 
குறித்த சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களுடன் தொடர்புடைய வழக்கு இன்று (28) மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீர்கொழும்பு பிரதான ஜெயிலர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 20 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கடந்த வழக்கு விசாரணையின் போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் 70 சந்தேகநபர்கள் பெயரிடப்பட்டிருந்ததுடன், சந்தேகநபர் இலக்கம் 1 முதல் 6 வரையிலானவர்கள் இன்று அடையாளம் காணும் அணிவகுப்புக்காக ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.

எவ்வாறாயினும், சுகாதாரக் காரணங்கள் மற்றும் வேறு வழக்கு நடவடிக்கை காரணமாக சந்தேகநபர்கள் இருவர் இன்று ஆஜர்படுத்தப்படவில்லை என்பதுடன், நான்கு சந்தேகநபர்களும் அவர்களை அடையாளம் காண்பதற்காகக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் நான்கு சாட்சிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இன்று ஆஜர்படுத்தப்படாத இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பில் சிறைச்சாலை தரப்பினால் நீதிமன்றத்திற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டது.

இதன்போது, அடையாளம் காணும் அணிவகுப்புக்காக நான்கு சாட்சிகள் ஆஜராகியதுடன், அவர்கள் சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 2,100 க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் பல வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் இரு தரப்பினரிடையே கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதலில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.