வத்தேகம 4 வயதுச் சிறுமி உயிரிழந்ததாக பரவும் தகவல் பொய் – பொலிஸார் உறுதி



வத்தேகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயதுச் சிறுமி உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் போலியானவை என்பதை பொலிஸாரும் கண்டி தேசிய வைத்தியசாலை நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளன.

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட வத்தேகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் 4 வயது சிறுமி ஒருவர் அண்மையில் மீட்கப்பட்டார்.

இச்சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரால் கொடூரமாக தாக்கப்பட்டதன் காரணமாகவே சிறுமி காயமடைந்தமை தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் அனுதாபச் செய்திகளும் புகைப்படங்களும் வேகமாகப் பரப்பப்பட்டு வந்தன.

இச்செய்தி குறித்து வத்தேகம பொலிஸ் நிலையம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை நிர்வாகத்திடம் வினவியபோது, பரப்பப்படும் தகவல்கள் பொய்யானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இவ்வாறான பொய்யான மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் எனவும் பொலிஸாரால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.