அழகு நிலையத்திற்குள் போதைப்பொருள் வியாபாரம் – ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களுடன் தம்பதி கைது


மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக, குறித்த அழகுநிலையைத்தை முற்றுகையிட்டு மேற்கொண்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்தன விஜேசேகரவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த ஜயமினி குமாரவின் மேற்பார்வையில் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மாத்தறை வெலேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபரிடமிருந்து 02 கிலோகிராம் 45 கிராம் ஹெரோயின் மற்றும் 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரது 26 வயதுடைய மனைவியிடமிருந்து 06 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கூடுதலாக, போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6,25,000 ரூபாய் பணம், இரண்டு மின்னணு தராசுகள் மற்றும் நான்கு கைப்பேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒரு கிராம் ஹெரோயின் 25,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட தம்பதியினர் நீண்டகாலமாக இப்போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் நாளை (28) மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.