அநுராதபுரத்தில் கால்வாயில் விழுந்த குழந்தை உயிரிழப்பு


அநுராதபுரம் கல்னேவ பகுதியில் கால்வாயில் விழுந்து இரண்டு வயது ஆண் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்தனர்.

கல்னேவ பொலிஸ் பிரிவின் கலேவெல வீதியில் உள்ள கால்வாயில் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் கல்னேவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கல்னேவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு வயது குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.

நேற்று பிற்பகலில், வீட்டில் இருந்த குழந்தையை காணவில்லை என அக்குழந்தையின் தந்தை அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, கலேவெல வீதி, கலேவெல பொலிஸ் பிரிவில், அப்பகுதி மக்களும் கலேவெல பொலிஸாரும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன்போது குழந்தையின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கால்வாயின் பாலத்தில் குழந்தை சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதுடன் கல்னேவ வைத்தியசாலைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் அக்குழந்தை உயிரிழந்துள்மை தெரியவந்துள்ளது.

குழந்தையின் சடலம் கல்னேவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்னேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.