தொடர்ந்து நீதிமன்றில் ஆஜராகாத பசில் – பிணைப் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு


சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தைப் பயன்படுத்தி மாத்தறையில் 1.5 ஏக்கர் காணியொன்றை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்காக வைப்புச் செய்யப்பட்ட பிணைப் பணத்தை பறிமுதல் செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.

மாத்தறை எலியகந்த வீதியின் பிரவுன்ஹில் பகுதியில் அமைந்துள்ள காணியொன்றைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாத்தறை பிரதம நீதவான் சத்துர திஸாநாயக்க முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான பசில் ராஜபக்‌ஷ, நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவ அறிக்கையொன்றை சமர்ப்பிக்காமல் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரது பிணைப் பணத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட நீதவான், பிணைக்காக கையொப்பமிட்ட மூன்று பிணையாளர்களுக்கும் அபராதம் விதித்துள்ளார். குறித்த அபராதத்தை செலுத்தத் தவறினால் அவர்களை சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள கைது உத்தரவு 2026 ஒக்டோபர் 27ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் முதலாவது மற்றும் இரண்டாவது பிரதிவாதிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.