தலைமன்னார் கடற்பரப்பில் தவித்த இலங்கை அகதிகள் கடற்படையினரால் மீட்பு


தலைமன்னார் கடற்பரப்பில் வழிதவறித் தவித்துக் கொண்டிருந்த குழுவொன்றைக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
 
குறிப்பிட்ட கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, மணல்திட்டு தொன்றில் வழிதவறி இருந்த இக்குழுவினர் அவதானிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்ட கடற்படையினர், இக்குழுவினர் தென்னிந்தியாவிலிருந்து கடல் வழியே இலங்கைக்கு வருகை தந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் ஒரு ஆண், நான்கு பெண்கள் மற்றும் 2 முதல் 14 வயதிற்குட்பட்ட மூன்று குழந்தைகள் அடங்குவதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதால், அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இவர்கள் இந்தியாவின் அனையூர் மற்றும் ஒக்கூர் அகதிகள் முகாம்களில் இருந்து இராமேஸ்வரம் வழியாக வந்துள்ளதாகவும், இவர்கள் முன்னர் இந்தியாவில் அகதி அந்தஸ்து கோரியிருந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இவர்களை அடுத்தகட்ட சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாகக் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.