தவறு செய்தவர்களும் துணை நின்றவர்களுமே சட்டத்தைக் கண்டு அஞ்ச வேண்டும் – நளிந்த ஜயதிஸ்ஸ



கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. அதனடிப்படையில் தவறுகளைச் செய்தவர்களும் அதற்குத் துணை நின்றவர்களுமே சட்டத்தைக் கண்டு அச்சப்பட வேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறித்து நீதிமன்றமே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும். பொலிஸார், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அல்லது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஆகியவை நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கும் தகவல்களின் அடிப்படையில் நீதிமன்றம் உரிய முடிவுகளை எடுக்கும்.

குற்றமொன்றில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய நபர் தான் எந்த அளவிற்கு அக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதை நன்கு அறிவார். புலனாய்வு அதிகாரிகள் படிப்படியாக உண்மைகளை வெளிக்கொண்டு வருவதால், குற்ற உணர்ச்சி உள்ளவர்கள் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடும்.

அத்துடன், கடந்த ஆட்சிக் காலத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைவிடப்பட்ட அல்லது திரும்பப் பெறப்பட்ட சில முறைப்பாடுகள் குறித்தும் மீண்டும் மறுவிசாரணைகள் நடத்தப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்தவர்களும் தவறுகளுக்குத் துணை நின்றவர்களுமே அரசாங்கத்தின் இந்த சட்ட நடவடிக்கைகளைக் கண்டு அச்சப்பட வேண்டும் என்றார்.