டோஹோவில் நிர்கதியான 209 பேரில் ஐந்தாம் கட்டமாக 30 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

பே.சபேஷ்
சட்டவிரோத ஆட்கடத்தல் பயண முகவர்களினால் கனடாவிற்கென அழைத்துச் செல்லப்பட்டு மேற்கு ஆபிரிக்க நாடான டோஹோவில் நிர்கதியான வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 209 பேரில் ஐந்தாம் கட்டமாக 30 பேர் கடந்த வெள்ளிக் கிழமை சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.
ஏற்கனவே நான்கு கட்டங்களில் நான்கு கட்ங்களில் 94 பேர் நாடு திரும்பியிருந்த நிலையில் நாடு திரும்பியோரின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.
சட்ட விரோத பயண முகவர்களினால் அழைத்துச் செல்லப்பட்ட 19 பெண்கள் 11 குழந்தைகள் உட்பட 209 பேர் அந்நாட்டில் முன்று தொடக்கம் 14 மாதங்கள்வரை விசா இன்றி தங்கவைக்கப்பட்டிருந்த வேளை அந்நாட்டு இராணுவத்தினரால் சுற்றிவழைக்கபட்டு இராணுவ மைதானமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் இவர்களில் பயண முகவரின் உதவியாளர்கள் நான்கு பேர் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த முகாமில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் பராமரிக்கப்பட்டாலும் போதிய அடிப்படை வசதிகள் இன்றி இவர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியதாகக் கூறப்படுகிறது.
ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் மற்றம் சர்வதேச புலம் பெயரந்தவர்களுக்கான அமைப்பு ஆகியன இவர்கள் மீதான விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் நாடு திரும்ப இணக்கம் தெரிவித்தவர்களே தற்போது நாடு திரும்புகிறார்கள்.
குறித்த ஆட்களை கனடாவிற்கென சட்டவிரோதமாக அனுப்பிவைத்த பிரதான சந்தேக நபரென கூறபப்டும் அருணகிரிநாதன் ஜெயரூபன் குற்றப்புலனாய்வுத்துறையினால் கடந்தவாரம் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டு தற்போது நீதிமன்ற உத்தரவு பெறபப்ட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது;
--