ஏறாவூர் நகர சபையின் அனைத்து சுகாதார தொழிலாளர்கள், வேலையாட்கள் மற்றும் சாரதிகள் இன்று (30)புதன்கிழமை காலை நகரசபை முன் ஒன்று கூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இன்று காலை சேகரித்த திண்மக்கழிவுகள் நிறம்பிய வாகனங்களுடன் ஏறாவூர் நகரசபைமுன் இவ் எதிர்ப்பு நடிவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அமைய அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் உரிய காலப்பகுதியில் வழங்கப்படாமை, சீருடைகள் விநியோகிக்கப்படாமை, பத்துமாதகால இடர்கடன் வழங்கப்படாமை மற்றும் செயலாளரும் நிதியுதவியாளரும் ஊழியர்களுடன் கடுமையாக நடந்துகொள்வதோடு தகாத வார்த்தைப்பிரயோகம் செய்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன்போது உள்ளுராட்சி உதவிஆணையாளர் க.சித்திரவேல், நகர சபையின் தவிசாளர் ஐ.அப்துல் வாசித் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் அவ்விடத்திற்கு வருகைதந்து ஊழியர்களது கோரிக்கைகளை கேட்டறிந்ததுடன் இதற்கான தீர்வை இரண்டு வாரத்தினும் பெற்றுத்தருவதாக கூறினர். இதற்கமையவே அனைத்து ஊழியர்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளை கைவிட்டுச் சென்றனர்.