அபிவிருத்தி மக்களை சென்றடைய வேண்டுமாக இருந்தால் சமாதானமான சக வாழ்வு மிக முக்கியம் - அலிசாஹிர் மௌலான


இந்த நாட்டில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டுமாக இருந்தால் ,மக்கள் அதனை அனுபவிக்க வேண்டுமாக இருந்தால் மக்களிடையே சமாதானமான சக வாழ்வை ஏற்படுத்துவதே மிக முக்கியமாக அமைகின்றது என்று தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலிசாஹிர் மௌலான தெரிவித்தார்.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்.
இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதியால், பிரதமரால், ஏனைய அமைச்சர் வாரியங்களால் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மதிக்கப்படுகின்ற மக்கள் மத்தியில் செல்லவாக்குப்பெற்ற ஒரு அரசியல்வாதி என்றால் அது மனோ கணேசன் அமைச்சர்தான் இவ்வாறான ஒருவருடன் பிரதியமைச்சராக சேவையாற்றக் கூடிய வாய்ப்பை தற்போது நான் பெற்றிருக்கின்றேன். அதன் அடிப்படையில் எங்களுடைய அமைச்சின் கீழ் மிக முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன.

இந்த நாட்டில் சமாதான சகவாழ்வு  வாழவேண்டிய உறுதிப்பாட்டை மக்கள் மத்தியில் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தேசிய சகவாழ்வு சங்கத்தை நாடுபூராகவும் உள்ள 1400 கிராமசேவை உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இதனை எமது அமைச்சர் ஆரம்பித்து வைக்கின்றார்.

இந்த நாட்டில் இன, மத பேதமற்ற முறையில் மக்கள் வாழவேண்டும் என்பதற்காக இந்த சங்கங்கள் ஊடாக நாங்கள் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம்.

இந்த நாட்டில் நடைபெறும் அபிவிருத்தி மக்களை சென்றடைய வேண்டுமாக இருந்தால் அதனை மக்கள் அனுபவிக்க வேண்டுமாக இருந்தால் மக்களிடையே சமாதானமான சக வாழ்வே ஏற்படுத்துவதே மிக முக்கியமாக அமைகின்றது. அதாவது மக்கள் சிறந்த முன்னேற்றத்தை அடைய வேண்டுமாக இருந்தால் அனைத்து மக்களிடமும் ஒற்றுமையும் இன ஐக்கியம் இதய சுத்தியுடன் இருக்க வேண்டும்.

இந்த பகுதியிலே பிறந்த விபுலானந்தர் அடிகளார் உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது என்று கூறியிருக்கின்றார் .உண்மையான உள்ளத்தினைதான் இறைவனும் வேண்டி நிற்கின்றார்.எனவே அதன் அடிப்படையில் இங்கு வேண்டுவது என்னவென்றால் ஒவ்வொரு சமுதாயத்தையின்; சமுதாய கடமைகளையும் நாங்கள் மதிக்க வேண்டும். இதுபோன்றுதான் நாங்கள் இயங்கிக் கொண்டு இருக்கின்றோம் .

நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மொழி அமுலாக்கல் சம்பந்தமாக இங்கு கூறியிருக்கின்றார். இது சம்பந்தமாக 25 இற்கும் மேற்பட்ட அரச சுற்றறிக்கைகள் வெளிவந்துள்ளன. ஆனால் அது ஏதோகாரணத்தால் அமுலாக்கல் செய்யப்படவில்லை மற்றும் மொழி பெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை காணப்படுவதாகவும் கூறியிருந்தார், 

இதனை நிவர்த்தி செய்யும் முகமாக உடனடியாக எமது அமைச்சின் ஊடான 500 மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த பிரச்சனை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யப்படக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.