வட்டார வாசிப்பு நிலையம் திறப்பு



மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு, 18ம் வட்டாரத்திற்குரிய வாசிப்பு நிலையம் திறப்பு நிகழ்வு  (13) மாநகரசபை 18ம் வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான், மாநகர சபை உறுப்பினரும், நூலகக் குழுவின் தலைவருமாகிய வே.தவராஜா, புளியந்தீவு தெற்கு பகுதிக்குரிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மாநகர சபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களால் விடுக்கப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் மாநகர முதல்வரின் வழிகாட்டலில் நூலகக் குழுவின் அனுசரணையுடன் புளியந்தீவு தெற்கு வட்டாரத்திற்கான வாசிப்பு நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு நேற்றைய  தினம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.



அதனைத் தொடர்ந்து புளியந்தீவு தெற்கு பகுதிக்குரிய சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது பிரதேசத்தின் பல்வேறு குறைநிறைகள் தொடர்பிலும், மக்களின் வாழ்வாதார செயற்பாடுகள், நுன்கடன் செயற்பாடுகள் போன்றன தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரதேச மக்களுடனான சிறு கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டு அவர்களின் வேண்டுகோள்கள் தொடர்பில் ஆராயப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.