மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தனியார் வகுப்புக்களுக்கு 2 வாரங்கள் தடை





மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் எதிர்வரும் 02 வாரங்களுக்கு எதுவிதமான பிரத்தியேக வகுப்புக்களையும் தடை செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், சாதாரண தரப் பரீட்சை முடிந்தவுடன் ஆரம்பிக்கப்படும் புதிய உயர்தர வகுப்புக்களுக்கும் தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.



கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற 10ஆவது அமர்வில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் இன்றைய தினம் முதல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்பொழுது பாடசாலைகள் அனைத்தும் விடுமுறையில் இருக்கின்றது. ஆனால் எங்களது பிரத்தியேக வகுப்புக்களுக்கான ஆசிரியர்மார் உடனே வகுப்புக்களை ஆரம்பித்து விட்டார்கள். பாடசாலை மாணவர்களுக்கு எதுவிதமான ஒரு பொழுது போக்குகளும் இல்லை. எனவே ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றலாம் என்று நினைக்கின்றேன். உயர்தர மாணவர்கள் மற்றும் புலமைப்பரிசில் மாணவர்கள் தவிர்ந்த அனைத்து வகுப்புக்களையும் 02 வாரங்களுக்கு எதுவிதமான பிரத்தியேக வகுப்புக்களும் நடாத்தக் கூடாது.

இரண்டு வாரத்திற்கு அனைத்து பிரத்தியேக வகுப்புக்களும் நிருத்தப்பட வேண்டும் என்று ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றி உரிய சட்ட ஏற்பாடுகளுக்கு ஊடாக ஆணையாளர் அந்த தீர்மானத்தினை அமூல்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் முதல்வர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வில் முதல்வர் முன்மொழிந்த பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பில் முன்வைத்த பிரேரணை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் குமாரசாமி காந்தராஜா கருத்துத் தெரிவிக்கையில்,

தற்பொழுது சாதாரன தர பரீட்சை நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த நேரத்தில் பொது மைதானங்களில் இரவு வேளைகளில் 09.00 - 10.00 மணி வரைக்கும் நிகழ்சிகள் அரங்கேறுகின்றன.

எங்களுடைய பிரதேசத்தில் ஒரு கிருஸ்தவ சபை ஒன்று சென்ற வாரம் இரவு 10.00 - 11.00 மணி வரைக்கும் நடைபெருகின்றது. இதற்கு அனுமதி வழங்குவது யார்? தயவு செய்து இந்த பரீட்சை நடைபெறுகின்ற காலத்தில் எந்த சமய நிகழ்சியோ அல்லது எந்த கலை நிகழ்ச்சியோ நேரம் கடந்த அனுமதியினை வழங்கக் கூடாது என்பதனை மாநகர சபையும் இதனை கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.

இது தொடர்பில்  முதல்வர் தெரிவிக்கையில், எங்களது அனைத்து மைதானங்களும் மாநகர சபையின் பொருப்பில் இருக்கின்றது என நினைக்கின்றேன். இது சட்ட அமூலால் ஏற்படுகின்ற பிரச்சனையே. உறுப்பினர்களாகிய உங்களுக்கும் பொரறுப்பு இருக்கின்றது.

உங்களது பிரதேசத்தில் சட்ட விரோதமாக இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்றால் உடனடியாக மாநகர சபையுடன் தொடர்பு கொண்டு அவற்றை சட்ட நடைவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்டு இந்த தீர்மானத்தினை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பிரதி முதல்வர் கே.சத்தியசீலன் தற்பொழுது கல்விப் பொதுச் சாதாரன தர பரீட்சை நடைபெறுகின்றது. அந்த பரீட்சை நிறைவு பெற்ற பின்னர் அந்த மாணவர்களுக்கு உடனடியாக கா.பொ.த உயர்தர வகுப்புக்களை ஆரம்பித்து விடுகின்றனர். அவர்களுக்கும் பரீட்சை முடிந்த பிற்பாடு இந்த இரண்டு வாரங்களை அவர்களுக்கும் ஒதுக்கிக் கொடுத்தால் அவர்களும் அந்த விடுமுறையின் சந்தோஷமான முறையில் பயன்படுத்துவர் என அவர் தனது கருத்தினை தெரிவித்து முடித்தார்.

இதனைத் தொடர்ந்து இத்திருத்தங்களுடன் முதல்வரால் முன்மொழியப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.