வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கு விளக்கமறியல்

மினுவாங்கொட மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்கள், எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசேட நீதிமன்ற விதிமுறைகள் இரண்டின் கீழ் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்ட விதிமுறை, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச கொள்கைப் பிரகடனம் ஆகிய சட்டங்களின் கீழ் சந்தேகநபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேல் நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரமே சந்தேகநபர்களால் பிணை கோர முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நேற்றிரவு 9 சந்தேகநபர்களும் இன்று முற்பகல் 4 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.