காட்டுப்பாதை வழியே கதிர்காமம் செல்லும் பக்தர்களுக்கு எம்மால் முடிந்தளவு உச்சக்கட்டப் பாதுகாப்பை வழங்குவோம் என வனஜீவராசிகள் திணைக்கள மாவட்ட அதிகாரி முனசிங்க அறிவித்துள்ளார்.
அண்மையில் காட்டுப்பாதை திருத்தவேலைக்குச்சென்ற ஒரு தொழிலாளி சிறுத்தைப்புலியால் தாக்கப்பட்டு மரணித்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. எனவே, பாதயாத்திரிகர்களுக்கான முழுமையான பாதுகாப்பை எவ்வாறு மேற்கொள்ளவிருக்கிறீர்கள்? என்று கோடீஸ்வரன் எம்.பி கேள்வியெழுப்பியதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். வரலாற்று பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் தொடர்பான இறுதிக்கூட்டம் நேற்றுமுன்தினம் (10) ஆலய வளாகத்திலுள்ள காரைதீவு மடத்தில் நடைபெற்றது.
ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க(சுதா), அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க இணைத்தலைமையில் கூட்டம் இரு மணிநேரம் நடைபெற்றது.
கூட்டத்தில்ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ. க.கு.சீதாராம் குருக்கள், பாணமை விகாராதிபதி வண.சந்திரரட்ண, மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.